AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 24 செப்டம்பர், 2011

கோவை ஜாஹிர் ஆற்றிய உரை


மேற்கு நாடுகளுக்கு ஈரான் கண்டனம்: அமெரிக்கா வெளிநடப்பு


நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் பேசியதைத் தொடர்ந்
நியூயார்க், செப். 23: ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத், மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார். அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்கமுடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதேநேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.
 தன்னுடைய உரையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின் லேடனை நீதியின் முன் நிறுத்தாமல், அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.
 தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன. தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.
 நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
 அவரது உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி மார்க் கோர்ன்பிளெü, தன்னுடைய மக்கள் பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை நிஜாத் கோட்டைவிட்டுவிட்டார். இழிவான சதிக் கோட்பாடுகளை ஐ.நா. பொதுச் சபையில் அவர் அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.
 அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜான் போல்டன், ஈரான் மக்கள் கொடுமைப்படுத்தப் படுவதையும் கொல்லப்படுவதையும் தடுக்க அமெரிக்கா தவறி விட்டது என்றார்.

சென்னையில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு; 318 பயணிகள் தப்பினர்


சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேய்ஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றுவிட்டது. அந்த நேரம் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தரை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
அந்த விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். தரை இறங்க விமானம் முயன்றபோது ஓடு தளத்தில் மற்றொரு விமானம் நிற்பதை விமானி கவனித்துவிட்டார். தரை இறங்கினால் மோதும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக விமானி விமானத்தை உயரே கிளப்பினார். பின் னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஓடு தளத்தில் இன்னொரு விமானம் நிற்பதால் தரை இறக்க முடியவில்லை.
 
உடனடியாக அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போதுதான் எந்திர கோளாறு காரணமாக டெல்லி விமானம் ஓடு தளத்தில் நிற்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக “தள்ளு வாகனம்” மூலம் டெல்லி விமானம் அப்புறப்படுத்தப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதன்பின் டெல்லியில் இருந்து வந்த விமானம் தரை இறக்க அனுமதிக்கப்பட்டது.
 
25 நிமிட தாமதத்துக்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானியின் சாமர்த்திய முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 318 பயணிகள் உயிர் தப்பினார்கள். ஒரு தளத்தில் விமானம் நிற்கும் போது இன்னொரு விமானம் இறங்க அனுமதி அளித்தது ஏன்? இந்த தவறு நடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விமான தள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு


புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆண்டு காலமாக ரேடியம் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது புற்றுநோய்களை உருவாக்கும் “செல்”களை அழிக்கிறது. இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, கதிர்வீச்சு செலுத்தாமல் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த டாக்டர்கள் தீவிர முயற்சி கொண்டனர்.
 
இந்த நிலையில் ஆல்பா கதிர்வீச்சு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்த மருந்தை லண்டனின் உள்ள ராயல் மார்ஸ்டன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை செய்தனர். இந்த மருந்து 922 பேருக்கு வழங்கப்பட்டது.
 
அதை சாப்பிட்டவர்கள் நோயின் தாக்கம் குறைந்து நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர். மேலும் இந்த மருந்தினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, இந்த மருந்து புற்று நோய்க்கு சிறந்தது என இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த மருந்து கண்டுபிடித்ததன் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ்பார்க்கர் தெரிவித்துள்ளார். இந்த மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சி குறிப்புகள் ஐரோப்பிய புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவை கண்காணிக்க உளவு செயற்கை கோளை அனுப்பிய ஜப்பான்


ஜப்பானுக்கு அருகே வடகொரியா உள்ளது. ஏவுகணை தயாரிப்பு, அணு ஆயுதங்கள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளால் இந்த நாடு ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இதை வடகொரியா மறுத்து வருகிறது. இருந்தும் அந்த நாடு கூறுவதை ஜப்பான் முழுமையாக நம்பவில்லை.
 
எனவே, வடகொரியாவின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.2050 கோடி செலவில் புதிய செயற்கை கோளை தயாரித்துள்ளது.இந்த செயற்கை கோளை கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி அதாவது 4 வாரத்துக்கு முன்பே அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் மழை காரணமாக விண்ணில் செலுத்துவது தாமதமானது.
 
இந்த நிலையில் நேற்று அந்த செயற்கை கோள் எச்.2ஏ என்ற ராக்கெட் மூலம் தானேஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளை ஜப்பான் விண் வெளி ஆய்வு நிறுவனமும், மீட்சுபிஷி கனரக தொழிற்சாலையும் இணைந்து தயாரித்துள்ளது.
 
இந்த செயற்கை கோளில் சக்தி வாய்ந்த காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் போட்டோக்கள் மூலம் தெரியவரும். இது தவிர 2 ரேடார் செயற்கை கோள்களையும் ஜப்பான் தயாரித்துள்ளது. அவை இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் இன்று பூமியில் விழுகிறது: “நாசா” விஞ்ஞானிகள் தகவல்


விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது.
 
இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்துள்ளது.  
 
நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
 
ஆனால் 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அந்த செயற்கைகோளின் 26 பகுதி பூமியை நோக்கி வருகிறது.அதன் 500 கிலோ எடை பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
ஆனால், அது வட அமெரிக்கா கண்டத்தில் விழாது. உலகின் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதன் துண்டுகள் கடலில்தான் விழும். எனவே, உலக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தேனிலவு முறிந்தது:அதிமுக-தேமுதிக உறவில் விரிசல்


சென்னை:தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின் இருக்கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அமோக வெற்றியும் பெற்றது.
இப்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்காமல், ‘அம்மையார்’ அனைத்து  இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து அனைவருக்கும் அதிரடி ‘ஷாக்’ அளித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன தேமுதிக பலவித முயற்சிகளையும் எடுத்துப் பார்த்தது. எதுவும் பயனளிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக இப்போது அறிவித்துள்ளது.
இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!
எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.
இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!
இவர்களது இந்த கூட்டணி தேனிலவு வெகு சீக்கரத்தில் முடிவுக்கு வந்துள்ளதை அரசியல் நிபுணர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

கண் தானம் செய்த பட்டோடி!


டெல்லி:பட்டோடி 20-வது வயதில் கார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்தார். அதன்பிறகு, இதுவரை 1.5 லட்சம் பேருக்கு பார்வைக் கிடைத்திட அவர் உறுதுணை புரிந்ததுடன், இறப்புக்கு முன்பு கண் தானம் செய்து தனது சேவையைத் தொடர்ந்தது நெகிழ்வுக்குரியது.
டெல்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை மரணமடைந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் உடல் அவரது சொந்த ஊரான பட்டோடி கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, தாம் உயிர் பிழைப்பது கடினம் என்று உணர்ந்த பட்டோடி மரணப் படுக்கையில் இருந்தபடி, தனது கண்ணை தானம் செய்ய முன்வந்தார். அவர் விருப்பப்படி, டெல்லியில் உள்ள ‘வேணு ஐ இன்ஸ்டிட்யூட்’டுக்கு அவரது கண் தானமாக வழங்கப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் பட்டோடி நல்லெண்ணத் தூதராக இருந்து வந்த அந்த இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாகி அளித்த பேட்டியில், “இந்த மையத்தில் மாதம்தோறும் 400 முதல் 500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். பட்டோடி கடந்த 20 ஆண்டுகளாக உண்மையான நல்லெண்ணத் தூதராக இருந்தார். இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு பார்வை கிடைக்க அவர் உறுதுணை புரிந்துள்ளார்,” என்றார் நெகிழ்வுடன்.
கண் சிகிச்சை முகாம்கள், கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என எதையும் பட்டோடி தவறவிட்டதில்லை என்று நினைவுகூர்ந்தார் அந்த நிர்வாகி.

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி


ஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.
அக்கட்சியின்  சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரும் தீர்மானத்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண  தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று குற்றவாளிகளின் தண்டனையையும் ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.
இந்த மாதம் செப்டம்பர் 28-ல் கஷ்மீர் சட்டசபையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பெட்ரோல் விலை உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல்  சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாமான்ய  மக்களின் துயரத்தை அதிகரிக்கும் விதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துவருவதாலும் இந்த விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என சாக்கு போக்கு சொல்லப்பட்டு விலை ஏற்றத்திற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 103 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.70 என நிர்ணயிக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலர் என உயர்ந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோல் விலையேற்றத்திற்கான எண்ணெய் நிறுவனங்களின் இந்த  நடவடிக்கை வன்மையாக  கண்டிக்கத்தக்கது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து கவலைப்படாமல் மக்கள் விரோத  மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்,  மத்திய அரசு எரிபொருட்களின் விலைகளை  உயர்த்தியதன் விளைவாக  ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது சாமான்ய மக்களின் துயரத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைக்கும் பொறுப்பினைத் தட்டிக் கழித்துவிட்டு மேலும் மக்களின் சுமையையும் வேதனையையும் அதிகரிக்கச் செய்யும் இந்தப் பெட்ரோல் விலையேற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம்


பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு முதன்முதன்முறையாக பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இதுவரை தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.
நஜாத் நயித் அலி(36), ஹிந்த் அமாஸ்(32)  ஆகிய அந்த இரு பெண்களுக்கு முறையே 80 மற்றும் 120 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்


மதநல்லிணக்கம், சமூக அமைதியை வலியுறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த செய்தி நடுநிலையாளர்களிடையே கடும் அதிருப்தியையும் கேலிச் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.


இருபத்தோறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி 2002ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து வரலாற்றில் அழியாத இழிவைப் பெற்றுவிட்ட நரவேட்டை நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களால் நகைப்புக்குரியதாக கருதப்பட்டதில் வியப்பில்லை. ஆடுகளுக்காக ஓநாய் ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போல இந்த செயல் அமைந்ததாக சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

2002 பிப்ரவரி 28ஆம் தேதி நிகழ்ந்த இனப்படுகொலையில் குதறப்படும் கதறலுடன் குல்பர்க் என்ற குடியிருப்பினுள் புகுந்து அடைக்கலம் புகுந்த மக்களை பின்னால் விரட்டிச் சென்று சமூக விரோதிகள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். அடைக்கலம் தேடி வந்த மக்களைப் படுகொலை செய்ய முயன்ற பாதகர்களை தடுத்து நிறுத்தினார் கோத்ரா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரி.

கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுக்களை கலவரக்காரர் களின் முன் வைத்து இவற்றை எடுத்துக் கொண்டு அப்பாவிகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார் இஹ்சான் சான் ஜாஃப்ரி. அவரது கெஞ்சலையும் உருக்கமான வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திய அந்த மனித மிருகங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றதோடு அவர்களுக்கு ஆதரவாக புறப்பட்ட இஹ் ஜாஃப்ரியையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றும் அவரது ஆணுறுப்பையும் வெட்டி சிதைத்து நெருப்பில் போட்ட கொடூரமும் யாராலும் மறக்க முடியாதது.

இந்தக் கொடூரங்களுக்கு காரணமானவர்கள் மீதும், அந்த கொலைப்படையின் தலைவனும் குஜராத் முதல் அமைச்சருமான மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தினை அணுகினார். அவரது நீண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக அவரது முறையீட்டினை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுக்குழு முன் குஜராத் முன்னாள் புலனாய்வு காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உள்ளிட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் நாட்டை யே அதிர்ச்சியடைய வைத்தது. மோடியின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியது.

உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விரைவில் அறிக்கையினை வெளியிட்டு உண்மைகளை உலகிற்கு வெளிப் படுத்தும் என எதிர்பார்த்த சூழலில் உச்சநீதிமன்றம் திடீரென ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி மோடி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் வருவது மட்டுமே உச்சநீதிமன் றத்தின் வேலை அல்ல என்று அறிவித்ததோடு குஜராத் மாநிலத்தின் கீழ் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் கூறினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

குஜராத் நீதிமன்றங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் உச்சநீதிமன்ற அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார் நீதிக்காக வேண்டி போராடிய மூதாட்டி ஜாக்கியா ஜாஃப்ரி.  இருப்பினும் முழுமையான விசார ணைகளை செய்யும் பொறுப்பு உச்சநீதிமன்றத்தின் பணி அல்ல, கீழ் நீதி மன்றங்களின் பணியே என்றும் கருத்துக்கள் சொல்லப் பட்டன.

அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தின் விசாரணைகளை சிறப்பு புலனாய்வுக் குழு கண்காணிக்கும் என்ற  உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மோடியை பரிசுத்தமானவர் என்று கூறிடவில்லை என்று சட்டநிபுணர்களாலும் கற்றறிந் தவர்களாலும் தெளிவாக கூறப்பட்டது. இருப்பினும் மோடி ஆதரவு ஊடகங்கள் மோடியை இனக்கலவரங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், மனிதப்புனிதர் என்றும் உச்சநீதிமன்றமே புகழாரம் சூட்டிவிட்டதைப் போல போலியான பரப்புரைகளை பா.ஜகவில் உள்ள மோடி ஆதரவு முகாமும் சில அரை வேக்காட்டு ஊடகங்களும் பரப்பத் தொடங்கின. மோடியும் தான் உத்தமர் என்று உலகம் அறிவித்துவிட்டதைப் போலவே ஆர்ப்பாட்டம் செய்தார்.

ட்விட்டர் இணையதளத்தில் நிஷீபீ வீs நிக்ஷீமீணீt என்று ரொம்ப நல்லவர்போலும் பாவ காரியங் களை வாழ்க்கையில் ஒரு நாள் கூட செய்யாதவர் போலும் புனிதர் வேடம் போட்டார்.

உச்சநீதிமன்ற அறிவிப்பினை தனக்கு சாதகமானதாக காட்டிக் கொண்ட மோடியை உத்தமர் என்ற கனவுலகில் திளைக்க வைப்பதற்கான வேறொரு (கெட்ட) காரியமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடந்தது.

இந்தியாவின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ் என்ற சுயேச்சையான அமைப்பு கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்து வருகிறதாம். இது அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுக ளுக்கும் இடையிலான உறவுகளை நிர்ணயிப்பதில், தீர்மானிப் பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

அதாவது அமெரிக்காவின் நலனைக்காக்க எதிர்கால லட்சியம் குறித்து முடிவெடுக்க சி.ஆர்.எஸ் என்ற அமைப்பு சில ஆய்வுகளை வெளியிடும். அதன்படி, தற்போ தைய வெளியீட்டில் மோடி சிறந்த பொருளாதார மேதையாகவும், அடுத்த பிரதமராகவும் வர வாய்ப்புள்ள தலைவர் என்று அது தனது கணிப்பினை வெளியிட்டது.

அமெரிக்க காங்கிரசனல் ரிசர்ச் சர்வீஸின் அறிக்கை ஒன்றும் அபூர்வமான அறிக்கை அல்ல. இது வெறும் மாதாந்திர அறிக்கை மட்டுமே. இதற்கே மோடியின் ஆதரவு கும்பல் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

மோடி மாபெரும் தலைவர்;  வருங்காலப்பிரதமர் என்றெல்லாம் கூச்சல்கள் எழுந்தன. அமெரிக்க காங்கிரஸின் இந்த அறிக்கைக்கு புதிதாக வியாக்கியானங்கள் வெளிப்பட்டு மோடியை வானளாவ உயர்த்த இப்போது என்ன அவசியம் வந்தது.?
மத உரிமைகளுக்கு எதிரான குற்றம் இழைத்தவர் எனக்கூறி மோடி அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் மீதான கறையைக் (!) களைய அமெரிக்காவில் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப் படுகிறது. அமெரிக்க காங்கி ரசனல் ரிசர்ச் சர்வீஸ் அறிவிப்பு செப்டம்பர் முதல்வாரம் வெளியாகிறது. மோடி தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு வெளியானது, அதனை வைத்து உச்சநீதிமன்றமே தனக்கு புனிதர் பட்டம் வழங்கிவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது, அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது என அனைத்துக்கும் ஒரு வலுவான பின்னணி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒரே ஒரு தடவை பிரதமர் பதவி சுகத்தை ருசித்து இனி என்றுமே அந்தப்பதவியை நெருங்க முடியாத பா.ஜ.கவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்புப் புகழ் அத்வானி முதல் பெல்லாரி சுரங்க மன்னர்களான ரெட்டிகளின் தோழி சுஷ்மாசு வராஜ், கர்ர்ப்ரேட்டுகளின் நண்பர் அருண்ஜேட்லி, போன்ற வர்களோடு ஓநாய் பார்வையோடு மோடியும் களத்தில் நிறுத்தப் பட்டார்.

ஆனால் அத்வானியை விட படுபயங்கர இமேஜ் கொண்ட மோடி மீது அக்கறை கொண்ட சில சக்திகள் மோடியின் பிம்பத்தின் மீது படிந்துள்ள இனக்கலவரம் என்ற இமேஜை மறைக்க, அதனை இந்திய மக்கள் மறக்கவும் மோடி திடீர் உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் நாடகத்தை அறிவித்து அதனை கடும் எதிர்ப்புகளுக்கும் ஆதரவாளர்களின் ஆரவாரங் களுக்கிடையே முடித்துக் கொண் டார். அவரது உண்ணாவிரதம் எடுபடாமல் போனது. எனினும் மோடியை பிரதமராக்கியே தீருவோம் என ஊடகபிற்போக்கு வாதிகளும் கார்ப்பரேட் கொள்ளையர்களும் முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டனர்.

இருப்பினும் மோடியின் இனவெறி இமேஜினால் மோடி எந்தக் காலத்திலும் குஜராத்திற்கு வெளியே போனியாக மாட்டார் என்ற உண்மையை ஆரம்பித்ததும் மோடியை மகாத்மாவாக்கியே தீருவோம் என்ற திட்டத்துடன் உண்ணாவிரத நாடகத்திற்கு ஒத்துழைப்பு தந்ததோடு மோடியை வாழ்த்தி போற்றி புகழ்பாடும் முழுபக்க விளம்பரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளி யாகும் நாளிதழ்களில் வெளி வந்தன.

முழுபக்க விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்காக ரூபாய் குஜராத் மக்களின் வரிப்பணம் ஏராளமாக வாரி இறைக்கப் பட்டது. அந்தப் பணத்திற்கு மயங்கி வாலாட்டும் நாலுகால் பிராணியைப் போல ஊடகங்கள் மோடியை வானைவிட புகழ்ந்தன. இது இலங்கை பிரச்சினையில் ஜெயவர்த்தனே தொடங்கி ராஜபக்ஷே வரை வீசிய எலும்புத்துண்டுகளுக்காக சில தமிழக ஊடகங்கள் செயல்பட்டதைப்போல தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்களும் செயல்பட்டு, குஜராத் நரபலி மோடியின் புகழ்பாடின.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா, அர்ஜூன் மொத்வாடியா உள்ளிட் டவர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.

மோடியின் உண்ணாவிரத நாடகத்தைக் கண்டித்து குஜராத் இனப்படுகொலையில் நரோடா பாட்டியாவில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உறவினர் கள் தர்ணா போராட்டம் நடத்தப்புறப்பட்டனர். போராட்டக் குழுவினரோடு இந்திய விண்வெளி இயலின் தந்தையான விக்ரம் சாராபாயின் மகள் மல்லிகா சாராபாய் மற்றும் ஜன்சங்கர் மஞ்ச்சின் தலைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞருமான முகுல்சின்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தேசத்தில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் ஐந்து கோடி மக்கள் தவிக்கின்றனர். ஒருநாளைக்கு இருபது ரூபாய் கூட தினக்கூலி பெறமுடியாத அவலநிலையில் லட்சோபலட்சம் இந்தியர்கள் வாடிவரும் நிலையில் 180 கோடி செலவழித்து 5 நட்சத்திர பாணியிலான உண்ணாவிரதம் இருந்த மோடி, ஏழை இந்தியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.
மோடியை வாக்குசீட்டின் மூலமும் சட்டப்படியும் தண்டி க்க ஒட்டுமொத்த இந்தியா காத்திருக்கிறது.
--ஹபிபா பாலன்

பசியால் வாடுபவரைவிட உடல் பருமனால் இறப்பவர்கள் அதிகம்

புதுடெல்லி : போதிய சத்துணவுகள் இல்லாமல் பசியால் வாடுபவர்களைவிட, உடல் பருமன் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு (ஐ.எப்.ஆர்.சி.) தெரிவித்துள்ளது. தற்போது உலக அளவில் ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குகின்றனர். ஆனால், சத்துணவு கிடைக்காமல் இறப்பவர்களைவிட, உடல் பருமனால் ஏற்படும் நோய் நொடிகளால் இறப்பவர்களே அதிகம்.

 குறைந்தது 100 கோடி பேர் சத்துணவு கிடைக்காமல் இருக்கும்பட்சத்தில், கட்டுப்பாடற்ற முறையில் உணவு உட்கொண்டு உடல் பருமனால் தள்ளாடி நடப்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 150 கோடி. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகம் என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்து ஐ.எப்.ஆர்.சி.யின் ஆசிய பசிபிக் இயக்குனர் ஜெகன் சாபகெய்ன் கூறுகையில், உலக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம். 

ஆனால், இதே நாடுகளில் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்டு உடல் பருத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு கட்டுப்பாடற்ற உணவு முறை, ஆயத்த உணவு மற்றும் அவசர உணவுகளே முக்கிய காரணம். உடல் பருமனால் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் இறக்கின்றனர். இது பசி கொடுமையால் இறப்பவர்களைவிட அதிகம் என்று அவர் தெரிவித்தார்.

கடலூர், விருத்தாசலத்தில் இலவச லேப் டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

கடலூர் : இலவச லேப்டாப் வழங்க கோரி கடலூர், விருத்தாசலத்தில் கல்லூரி முதுகலை மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ் 2, இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச லேப் டாப் வழங்கி வருகிறது. தங்களுக்கும் இலவச லேப் டாப் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் முதுகலை மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ, மாணவிகள் 120 பேர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இவர்களுக்கு ஆதரவாக இளங்கலை மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ, மாணவிகள் 250 பேர் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று விருத்தாசலம் சப்கலெக்டர் ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் தொடங்கியது

சென்னை : உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. எந்தெந்த வார்டு யாருக்கு ஒதுக்கீடு என்ற விவரம் வெளியிடாததால், அரசியல் கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

மொத்தம் 1,32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது, அரசியல் கட்சிகளியே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தேர்தல் தேதி அறிவித்து, ஒருவார இடைவெளி விடப்பட்டு அதன் பிறகுதான் வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. ஆனால், பல நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற குழப்ப நிலையே அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நிலவியது. இதனால், மதியம் வரை குறிப்பிடத்தக்க அளவில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.

சுயேச்சைகளும் நகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலங்களில் யாரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்ததாக கூறினர். சில இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்கள் வராததால், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், எந்தெந்த வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும், 

தனி, பொது வேட்பாளர்கள் நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஒட்டப்படாததால் குழப்பமும் நிலவியது. இதுபற்றி நகராட்சி மற்றும் மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘நேற்று முன்தினம் இரவு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணிக்குத் தான் நாங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளோம். இதுபற்றி தகவல் எங்களது உயர் அதிகாரியிடம் இருந்து வரவில்லை. தகவல் வந்த பிறகுதான் முழு விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

நேற்று சுயேட்சைகள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்தனர். ஆனால், வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுகவில் யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நேற்று தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதனால், இன்று முதல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை தடுக்க தவறிய சிதம்பரம்; பிரணாப் ஒப்புதலுடன் நிதியமைச்சகம் பிரதமருக்கு அனுப்பிய கடிதம்


டெல்லி:2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க 2007-ல் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழு   நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தற்போதைய நிதி அமைச்சக குழுவின் மூத்த அதிகாரி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதமானது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.
இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான (Economic Affairs) பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.
இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.
நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவு


மும்பை:மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடும் பின்னடைவைச் சந்தித்தன.
இன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 704 புள்ளிகள் சரிந்து வர்த்தக முடிவில் 16,361.15 புள்ளிகளாக நிறைவுற்றது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 209.60 புள்ளிகள் சரிவடைந்து 4,923.65 புள்ளிகளாக நிறைவுற்றது.
இன்று பொதுவாக அனைத்து பங்குக் குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் உலக முதலீட்டாளர்கள் பணத்தைப் பாதுகாப்பாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்ததால் பங்குச் சந்தைகளிலிருந்து பெரும்தொகை இன்று முதலீடு நீக்கம் பெற்றது.

புகார் கொடுக்க வந்த தலித் நபரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளிய ஐஏஎஸ் அதிகாரி


எட்டாவா:தலித் இனத்தைச் சார்ந்த நபர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று அவரது குறைகளை தெரிவிப்பதற்காக முயற்சி செய்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரியால் கழுத்து சட்டையை பிடித்து வெளியில் தள்ளபட்டுள்ளார்.
அவர் கான்ஷி ராம் அவாஸ் யோஜ்னா என்ற நகர்ப்புற ஏழைகள் விடுதி பற்றி புகார் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சிறப்பு முதன்மை செயலாளர் மற்றும் எட்டாவா மாவட்ட நீதிபதி ஆர்.பி. சிங்க் ஆகியோர் புகார் கொடுக்க வந்த தலித் நபரின் கழுத்துச் சட்டையை பிடித்து அங்ன்கன்வாடியை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே இத்தகைய சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 22 செப்டம்பர், 2011

உலகிலேயே அதிசயமானது மனித மூளை...


ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு. குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது, நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது, ஊசிக்காதில் நூலைச் செருகுவது, கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது, உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,
"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,
"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!
ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.
40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.
உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?
ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் "இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்" என்றார். "மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி." என்றார்.
இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.
அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.
இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.
இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.
சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).
ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).
ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!
தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.
ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.
மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.
எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!
நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!
கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...
மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.
ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.
சராசரி மனிதன் 1349 கிராம்.
அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.
மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.
பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!
மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.
முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.
பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.
முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.
இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.
இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!
சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!
முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.
இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!
இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.
தாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.
எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.
நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.
குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.
புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.
வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.
ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.