AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் தொடங்கியது

சென்னை : உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. எந்தெந்த வார்டு யாருக்கு ஒதுக்கீடு என்ற விவரம் வெளியிடாததால், அரசியல் கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

மொத்தம் 1,32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது, அரசியல் கட்சிகளியே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தேர்தல் தேதி அறிவித்து, ஒருவார இடைவெளி விடப்பட்டு அதன் பிறகுதான் வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. ஆனால், பல நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற குழப்ப நிலையே அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நிலவியது. இதனால், மதியம் வரை குறிப்பிடத்தக்க அளவில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.

சுயேச்சைகளும் நகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலங்களில் யாரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்ததாக கூறினர். சில இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்கள் வராததால், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், எந்தெந்த வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும், 

தனி, பொது வேட்பாளர்கள் நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஒட்டப்படாததால் குழப்பமும் நிலவியது. இதுபற்றி நகராட்சி மற்றும் மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘நேற்று முன்தினம் இரவு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணிக்குத் தான் நாங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளோம். இதுபற்றி தகவல் எங்களது உயர் அதிகாரியிடம் இருந்து வரவில்லை. தகவல் வந்த பிறகுதான் முழு விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

நேற்று சுயேட்சைகள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்தனர். ஆனால், வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுகவில் யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நேற்று தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதனால், இன்று முதல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக