சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேய்ஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றுவிட்டது. அந்த நேரம் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தரை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். தரை இறங்க விமானம் முயன்றபோது ஓடு தளத்தில் மற்றொரு விமானம் நிற்பதை விமானி கவனித்துவிட்டார். தரை இறங்கினால் மோதும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக விமானி விமானத்தை உயரே கிளப்பினார். பின் னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஓடு தளத்தில் இன்னொரு விமானம் நிற்பதால் தரை இறக்க முடியவில்லை.
உடனடியாக அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போதுதான் எந்திர கோளாறு காரணமாக டெல்லி விமானம் ஓடு தளத்தில் நிற்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக “தள்ளு வாகனம்” மூலம் டெல்லி விமானம் அப்புறப்படுத்தப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதன்பின் டெல்லியில் இருந்து வந்த விமானம் தரை இறக்க அனுமதிக்கப்பட்டது.
25 நிமிட தாமதத்துக்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானியின் சாமர்த்திய முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 318 பயணிகள் உயிர் தப்பினார்கள். ஒரு தளத்தில் விமானம் நிற்கும் போது இன்னொரு விமானம் இறங்க அனுமதி அளித்தது ஏன்? இந்த தவறு நடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விமான தள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக