குறைந்த சேவைக் கட்டணத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய திட்டம் சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
அரிமா சங்கம் மற்றும் தமிழ்நாடு இணையதள மைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், ரூ.150-க்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றுத் தரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து அரிமா சங்க ஆளுநர் பழமலை மற்றும் தமிழ்நாடு இணையதள மைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:-
பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அது குறித்த தகவல்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில இடைத்தரகர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களிடம் ரூ.1000 வரை கமிஷன் வாங்குகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல் மற்றும் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று தருதல் ஆகிய சேவைகளை ரூ.150 கட்டணத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராயநகர், அண்ணாசாலை, ஆழ்வார்திருநகர் உள்பட 21 இடங்களில் இணையதள மையங்களை பாஸ்போர்ட் சேவை மையங்களாகப் பயன்படுத்த உள்ளோம்.
பாஸ்போர்ட் சேவை மையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் http://passport.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக