வீராணம் ஏரி வறண்டதால் வெற்றிலை கொடிக்கால்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.
காட்டுமன்னார்கோவில் பகுதி வீராணம் ஏரி கரையில் உள்ள திருச்சின்னபுரம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், நத்தமலை, கந்தகுமாரன், கொல்லமலை கீழ்பாதி என பல்வேறு
பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை பயிர் பல்லாண்டு பயிராகும். மேட்டு பாத்திகள் அமைத்து நடவு செய்யப்படும். வெற்றிலை பயிருக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இதுபற்றி நத்தமலையை சேர்ந்த விவசாயி கர்ணன் கூறியதாவது: நான் ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடி செய்துள்ளேன். வீராணம் ஏரியை நம்பியே சாகுபடி செய்தேன். தற்போது வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை கொடிக்கால்களின் கிடங்குகளில் தண்ணீர் இல்லா மல் செடிகள் காய்ந்து வருகின்றன. ஆடி மாதம் வெற்றிலை பயிரை வெட்ட வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாததால் யாரும் வெட்டவில்லை.
மேலும் இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் வரவில்லை. இதனால் பலர் வெற்றிலை கொடிக்கால்களை அழிக்கும் நிலையில் உள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெற்றிலை மிக சிறியதாக உள்ளது. உற்பத்தியும் குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் வெற்றிலைக் கொடிக்கால்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்படும் என தெரிவித்தார். விளைச்சல் பாதிப்பு காரணமாக வெற்றிலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக