AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 19 ஜூன், 2013

மேல்சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா


டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர். 

சி.ஐ.டி காலனியில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் பகல் 1 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- 

டெல்லி மேல்-சபை தேர்தலில் எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பது என்று இன்று காலை நடந்த மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க.தலைவர் கருணாநிதியை சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்தோம். 

மேல்-சபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு போதுமான வாக்குகள் இருப்பதால் எங்களுடைய வாக்குகளை வீணாக்காமல் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மூலம் அதன் பலம் 25 ஆக உயர்ந்தது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ராமநாதபுரம், ஆம்பூர் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக