கடலூர், : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கலுக்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 10&1&2013 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக படிவம் 7லும், நீக்குதல் தொடர்பாக படிவம் 6லும், பெயர், முகவரி மற்றும் புகைப்பட திருத்தங்கள் தொடர்பாக படிவம் 8லும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மாற்றம் செய்தவர்கள் தங்களது பெயர்களை புதிய முகவரிக்கு மாற்றம் செய்து கொள்ள படிவம் 8ல் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் பதிவு மையங்களில் நேரடியாக வழங்கி ஒப்புகை சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த வாக்காளர் பதிவு மையங்களானது வட்டாட்சியர் அலுவலகங்களில் முன்னரே உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் மையங்களிலேயே இணைந்து இயங்கி வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை தங்களது பகுதிகுட்பட்ட வாக்குசாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கி ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு 45 நாட்களுக்குள் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக