சிதம்பரம், ஆக. 11: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர் வழியாக ஆத்தூர் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு புதுதில்லி ரயில்வே போர்டு அனுமதி வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
÷கடித விவரம்: கடந்த 2008-2009 ரயில்வே பட்ஜெட்டில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பரிந்துரையின் பேரில் சிதம்பரத்திலிருந்து ஆத்தூர் வரை (சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோயில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், குன்னம், அரியலூர், ஆத்தூர்) புதிய ரயில்பாதையை அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். அதனடிப்படையில் 2009 ஜூன் மாதம் ரயில்வே போர்டுக்கு இத்திட்டத்தின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் புதுதில்லி ரயில்வே போர்டு அனுமதிக்காக இத்திட்டம் காத்திருக்கிறது. இந்த புதிய ரயில்பாதைக்கு அனுமதி வழங்குவதன் மூலம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்புள்ளது. இத்திட்டம் ஆங்கிலேயர் காலத்தின் கனவு திட்டமாக உள்ளது.
எனவே இத்திட்டத்துக்கு மத்திய ரயில்வே போர்டு அனுமதி வழங்கி திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மயிலாடுதுறை முதல் சென்னை வரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் புக்கிங் கவுன்ட்டர் திறக்க வேண்டும் என சரவணக்குமார் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக