வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை தவறாமல் அளிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 2012-ம் ஆண்டுக்கான சுருக்குமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 11-ந்தேதி வரை நேரிலும், ஆன்-லைன் மூலமும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது தற்போது வாக்குசாவடி களப்பணியாளர்கள் மூலம் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.
களப்பணியாளர்கள் விசாரணை
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மற்றும் ஆன்-லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது களப்பணியாளர்களைக்கொண்டு விடுமுறை நாட்களிலும் விசாரணை மேற்கொள்ள இருப்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பாக மனு கொடுத்தவர்கள், அவரவர்களின் இருப்பிடத்தில் விடுமுறை நாட்களிலும் இருந்து களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை அளித்தும், ஆன்-லைனில் விண்ணப்பித்தவர்கள், தங்கள் மனுவில் மீள் கையொப்பம் இட்டும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர தகுந்த ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை அளிக்க தவறுபவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக