புதுடெல்லி:பிறந்த 24 மணிநேரத்தில் குழந்தைகள் மரணிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் பிறந்த தினத்திலேயே இறப்பதாக அமெரிக்காவில் இயங்கும் சேவ் த சில்ட்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தி பெருகி வரும் நிலையில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் பிறந்த தினத்தில் மரணிக்கும் குழந்தைகளில் 29 சதவீதமும் இந்தியாவிலாகும். குறைமாத பிரசவம், சுத்தமின்மை, தாயின் உடல் நிலை சீர்கெடுதல், பருவ வயதை அடையும் முன்பே கர்ப்பமடைதல் ஆகியன முக்கிய காரணமாகும். இந்தியாவில் 47 சதவீதம் பெண்களுக்கு 18 வயது ஆகும் முன்பே திருமணம் நடைபெறுவதாகவும், பிறக்கும் குழந்தைகளில் 28 சதவீதம் குழந்தைகளுக்கு எடைக் குறைவு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மக்கள் தொகை அதிகமான 10 நாடுகளில்தான் பிறந்த தினத்திலேயே அதிகமான குழந்தைகள் இறக்கின்றன. இந்தியாவுக்கு அடுத்து சீனா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. பிரசவத்தை தொடர்ந்து தாய் மரணிப்பதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 56 ஆயிரம் அன்னையர் மரணிக்கின்றனர். நல்ல முறையில் குழந்தைகள் பிறக்கும் 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இதில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. காங்கோ கடைசி இடத்தில் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக