ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியவர் உஸாமா பின்லேடன். அவரை மையமாக வைத்து படமெடுக்க ஹாலிவுட் இயக்குனர் கத்ரின் பிகெலோ திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் ஜீரோ டார்க் 30 (ZD30). இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்திலுள்ள சண்டிகரில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படத்தில் முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை உண்டாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனக் கூறி இந்தப் படப்பிடிப்பை தடை செய்ய வேண்டுமென்று ஜம்மியத்தே உலமா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஜம்மியத்தே உலமா ஹிந்தின் அலுவலக செயலாளர் முஹம்மது காலித் நஜீம் முஜத்திதீ கூறுகையில், இந்தப் படத்தில் இஸ்லாமிய மார்க்கத்தையும், புனித நூலான குர்ஆனையும் பரிகாசம் செய்யக்கூடிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாத்து வருகின்ற சண்டிகர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.
மேலும், முஸ்லிம் அமைப்புகள் சண்டிகர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு படத்தை தடை செய்ய வேண்டுமென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், பயங்கரவாதிகளாக நடிக்கும் நடிகர்கள் முஸ்லிம்கள் அணியும் ஆடைகளையும், போலியான ஒட்டு தாடியையும் வைத்து நடித்துள்ளனர். தீவிரவாதிகள் புனித குர்ஆன் படிப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாகனத்தின் பின்புறம் திருக்குர்ஆன் வாசகங்கள் அரபியில் உள்ளன. இதுபோன்ற காட்சிகள் முஸ்லிம்களைக் காயப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படப்பிடிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக