AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 28 நவம்பர், 2011

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு


 பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு..... 


Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.
ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக