AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 22 ஜூன், 2013

இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் இணைந்தது

இந்திய தேசிய லீக் கட்சியுடன், தேசிய லீக் கட்சி இணைந்தது. கட்சியின் தமிழ்நாடு தலைவராக, பஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் அறிவித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். கூட்ட முடிவில், முகமது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய தேசிய லீக்
மறைந்த தலைவர்கள் சுலைமான் சேட், அப்துல் லத்தீப் ஆகியோரால் இந்திய தேசிய லீக் கட்சி தொடங்கப்பட்டு கட்சியை திறம் பட நடத்தி வந்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றளவும், அகில இந்திய அளவில் இந்திய தேசிய லீக் கட்சி பல்வேறு மாநிலங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரிந்து சென்றவர்களால்…
இடையில் சில காலமாக, இந்த கட்சியில் இருந்து பலர் பிரிந்து, தேசிய லீக் உள்பட பல்வேறு பெயர்களிலும் செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே, அகில இந்திய அளவில், முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கட்சியை நடத்திச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் கட்சியை இணைப்பது என்று தீர்மானித்தனர்.
இணைப்பு
இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் தேசிய லீக் உள்பட பல்வேறு பெயர்களில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடியது. கூட்டத்தில், தேசிய லீக் கட்சியை, இந்திய தேசிய லீக் கட்சியுடன் இணைப்பது என்று அந்தக் கட்சி நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
தலைவர் நியமனம்
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பஷீர் அகமது ஒரு மனதாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தலைவர் அறிவிப்பார். இவ்வாறு முகமது சுலைமான் கூறினார்.
இனி ஒரே கட்சியாக செயல்படுவோம்
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பஷீர் அகமது கூறும்போது, ‘‘தேசிய லீக் உள்பட பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வந்த முஸ்லிம் அமைப்புகள் இன்று இந்திய தேசிய லீக் கட்சியுடன் இணைந்துள்ளன. நிஜாமுதின், அப்துல் காதர் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்துள்ளனர். இனி அனைவரும் இந்திய தேசிய லீக் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக