கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு இன்று முதல் மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1460 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து வெறும் 60 மில்லியன் கனஅடியாக குறைந்தது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்து அனுப்ப முடியாமல் போனதால் கடந்த பிப்.10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியாக (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) உயர்ந்துள்ளதை அடுத்து நல்ல நாளான அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மீண்டும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்புவது தொடங்கப்பட்டுள்ளது என பொதுபபணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கல்லணையிலிருந்து கீழணைக்கு 220 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். தற்போது நிலவரப்படி 5 அடி நீர் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக