மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
தமிழக அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை, புதிய வரிவிதிப்புகள் இன்றி சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், விசேஷ அம்சங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்றாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வழிமொழியப்பட்டிருக்கின்றன.
வெளிச்சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒருகிலோ அரிசி ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பும், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை அடுத்த ஓர் ஆண்டிற்கு நீட்டிப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பும், காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய பசுமை நுகர்வோர் கடைகள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
அதேசமயம், தற்போது நிலவிவரும் கடும் மின்தட்டுப்பாடு குறித்து மாற்று திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும், தமிழகத்தில் பூரண விலக்கு குறித்தும் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக