தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டர் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமானதாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
. ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகள் தவிர பல கம்பெனிகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இது போன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும். ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றிவிட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும் போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகப்பு, சளி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடி தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை கரகரப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக