கடலூர், அக்.31-
கடலூர் மாவட்டத்தில் சொத்துக்களின் வரைவு வழிகாட்டி மதிப்பீடு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஏதும் ஆட்சேபம் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழிகாட்டி மதிப்பீடு
வணிகவரித்துறை அரசாணையின் படி சொத்து பரிமாற்றம் செய்யும் ஆவணங்களுக்கு சரியான சந்தை மதிப்பை நிர்ணயம் செய்ய பதிவுத்துறை தலைவர் தலைமையில் மைய மதிப்பீட்டுக்குழுவும், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் துணை மதிப்பீட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. மேலும் 1-8-2007-ந்தேதி முதல் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைய தேதியில் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டி மதிப்பு தயார் செய்யப்பட்டு கடந்த 28-ந்தேதி கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட துணை மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சேபம் இருந்தால்…
மேற்படி அங்கீகரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டி மதிப்பு விபரம் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், வருவாய் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்படி புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் குறித்து பொதுமக்கள் எவருக்கேனும் ஆட்சேபனை ஏதும் இருந்தால் இது குறித்து எழுத்து மூலமாக ஆட்சேபனையை உரிய ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், வருவாய் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு 15 நாட்களில் கொடுத்து தீர்வு ஏற்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக