ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பாணி மனித குண்டு மூலம் கொல்லப்பட்டார். அவரது கொலை ஆப்கானிஸ்தானில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகரம் காபூல் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த நிலையில் ரப்பாணியின் உடல் நாளை காபூலில் அடக்கம் செய்யப்படும் என்று ரப்பாணி கட்சியின் செயலக தலைவர் ஷாபுதீன் தெரிவித்து உள்ளார்.
எனவே நாளை கலவரம், வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்க காபூல் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரப்பாணி இறுதி ஊர்வலத்திலும் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கூறி இருக்கிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே ரப்பாணி கொலையில் முன்னாள் மந்திரி ரகமத்துல்லாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரகமத்துல்லா தலிபான் ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். ஹர்சாய் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு புதிய அரசுக்கு ஆதரவாக மாறினார். ரப்பாணியை மனித குண்டாக மாறி கொன்ற இஸ்மத்துல்லாவை ரப்பாணியை சந்திக்க ரகமத்துல்லா தான் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ரப்பாணி ஆப்கானிஸ்தான் அமைதி குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார். அமைதி குழுவில் உறுப்பினராக இருந்த ஓருவருடன் ரகமத்துல்லா தொடர்பு கொண்டு கொலையாளி இஸ்மத்துல்லாவை ரப்பாணியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.எனவே ரகமத்துல்லா மீது சந்தேகம் வலுத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக