வேலூரில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதுதவிர மாவட்டம் முழுவதும் வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், ஆற்காடு, கலவை, வாணியம் பாடி, குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய 10 இடங்களில் அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இன்டர்நெட் வசதியுடன் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனைத்து பணிகளும் முடிந்து சோதனை முறையில் இயங்கி வருகிறது.
கணினி மயமாவதால் அந்த பணிகளை கையாளுவது எப்படி என்று ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் சிலரை தேர்ந்தெடுத்து எல்காட் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மீதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் வருகிற 5ம் தேதி முதல் 15 பிரிவுகளாக பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கென்னடி கூறியதாவது: கணினிமயமாவதால் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களது பெயர், விலாசம் ஆகியவை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அடையாள எண்ணுடன் கூடிய சிலிப் வழங்கப்படும். அதை டாக்டரிடம் கொடுத்ததும், கம்ப்யூட்டரில் பதிவு செய்த விவரம் வந்துவிடும். பின்னர் அந்த நோயாளிக்கு என்ன பிரச்னை என்று கேட்டறிந்து அதற்கு என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும் என்பதை கம்ப்யூட்டரில் இருக்கும் பட்டியலில் பதிவு செய்து விடுவார்.
அந்தந்த பிரிவுகளுக்கு சென்று சோதனை செய்ததும், அதற்கான ரிசல்ட் அங்கு கம்ப்யூட்டரில் பதிவு செய்து நெட்வொர்க் மூலம் டாக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். பார்மசியில் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கும்போது அதற்கேற்ப கம்ப்யூட்டரில் தானாகவே இருப்பு குறைந்து கொண்டே வரும். மருத்துவமனை பணியாளர்களுக்கு இதுகுறித்த பயிற்சி முடிவடைந்ததும் விரைவில் இந்த செயல்பாடு நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக