அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 35 நிமிடம் பாட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பள்ளிகள் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டன.
அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமில்லாததால் இந்த ஆண்டு அமல்படுத்த இயலாது. எனவே பழைய பாடப்புத்தகமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் பள்ளிகள் தாமதமாக ஜூன் 15-ந்தேதி தொடங்கின. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டன.
இதையடுத்து ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. காலாண்டு தேர்வு 22ந்தேதி தொடங்குகிறது. மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் பாட வேளை நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாட வேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக