டெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.
மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.













