சென்னை :”விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், “முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.